கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, June 30, 2012

னந்த விகடன் சில காலம் ‘ஜூனியர் போஸ்ட்’ என்ற வார இதழை வெளியிட்டு வந்தது. நியூஸ் பேப்பரின் டேப்ளாயிட் சைஸில் இருக்கும் அதில் கதை, கட்டுரை, ஜோக்ஸ் என்று ஏராளமான அம்சங்களுடன் படிக்கும் சுவாரஸ்யமும் குறையாமல் இருந்தது. மதன் ஆசிரியராக இருந்தார் என்று நினைவு. அந்தப் பத்திரிகையில் ‘சுஜாதாவின் எண்ணங்கள்’ என்ற தலைப்பில் வாரா வாரம் சுவாரஸ்ய சிறு கட்டுரைகள் எழுதினார் சுஜாதா. அவற்றையெல்லாம் தொகுத்து விகடன் பிரசுரம் ‘சுஜாதாட்ஸ்’ என்ற புத்தகமாக 2007ம் ஆண்டு வெளியிட்டார்கள். இதுவரை படித்திரா விட்டால் உடன் வாங்கிப் படித்து விடுங்கள். அத்தனை கட்டுரையும் முத்துக்கள். அதிலிருந்து சாம்பிளுக்கு ஒன்றே ஒன்றை இங்கே தருகிறேன்.

                        சிறுகதைக்கு கதை தேவையா..?

சிறுகதை பற்றி என்னிடத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:

1. சிறுகதை என்பது என்ன? அதை எழுத ஏதாவது விதி இருக்கிறதா?

எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு விதிதான் அதற்கு. சிறிதாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை. A Short fictional narrative in prose. மற்ற எந்த வரையறைகளுக்குள்ளும் நவீன சிறுகதை அடங்காது.

2. இதில் நல்ல சிறுகதை என்பது?

நல்ல சிறுகதை என்பது சிறிதாக, சிறப்பாக உரைநடையில் விவரிக்கப்பட்ட கதை.

3. ‘சிறப்பாக’ என்கிற வார்த்தை அவசியமா?

அப்படித்தான் நான் நினைக்கிறேன். கதை சிறப்பாக இல்லையென்றால் அதை மறப்பார்கள். ஒரு கதை ஜீவித்திருக்க, அது சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

4. சிறுகதையின் அளவுகோல் என்ன? வார்த்‌தைகளின் எண்ணிக்கையை வைத்து கணக்கிடுவார்களா?

சுமார் ஆயிரத்திலிருந்து பத்தாயிரம் வார்த்தைகளுக்குள் சொல்லப்பட வேண்டுமென்று குத்துமதிப்பாகச் சொல்லலாம்.

5. அளவு வரையறை எதற்கு?

அதை ஒரு வழிகாட்டியாகத்தான் சொல்ல வேண்டும். நூறு பக்கங்கள் இருந்தால் அதை எனக்கு சிறுகதை என்று ஒப்புக் கொள்ளத் தயக்கமாக இருக்கிறது. அதேபோல் ஒரு பக்கத்தில் இருந்தால் அது கதையல்ல, கதைச் சுருக்கம். அதற்குக் கீழ் என்றால் கவிதையாகச் சொல்லி விடலாம்.

6. அளவு வரையறை தேவைதானா?

தேவையில்லை என்று நவீன விமர்சகர்கள் சொல்கிறார்கள். உதாரணமாக ஜாய்ஸின் ‘யுலிஸ்ஸிஸ்’ஸை (768 பக்கங்கள்) ஒரு சிறுகதை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். புதிதாக எழுதுபவர்கள் இந்த அளவு வரையறையைக் கடைப்பிடிப்பது நல்லது.

7. சிறுகதைக்கு கதை தேவையா?

நல்ல கேள்வி. கதை தேவையா என்பதையும் இப்போது சந்தேகிக்கிறார்கள். ஆர்வெல்லின் 'A Hanging' என்னும் கட்டுரையை சிறுகதையாகப் பார்க்கிறவர்களும் உண்டு.

8. சிறுகதை எதைப் பற்றி இருக்கலாம்?

யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் இருக்கலாம்.

9. காலம்?

நூற்றாண்டுக் காலத்தையோ, சில நிமிடங்களையோ சொல்லலாம்.

10. கதை மாந்தர்கள்?

கறுப்போ சிவப்போ, ஏழையோ பணக்காரனோ, வயசானவர்களோ இளைஞர்களோ, வியாதியஸ்தர்களோ தர்மகர்த்தாக்களோ, நாய் வளர்ப்பவர்களோ பாய் முடைபவர்களோ, விஞ்ஞானிகளோ வேதாந்திகளோ, மீசைக்காரர்களோ ஆசைக்கு அலைபவர்களோ, மீன் பிடிப்பவர்களோ பஸ் பிடிப்பவர்களோ, சினிமா பார்ப்பவர்களோ இனிமா எடுப்பவர்களோ -எந்தக் கதாபாத்திரமும் அதற்குத் தடையில்லை. மனிதர்களே இல்லாமல் கூட கதை சொல்லலாம். அப்படி ஒரு விஞ்ஞானக் கதை இருக்கிறது.

11. கதையை எப்படிச் சொல்ல வேண்டும்?

கண்ணீர் வரச் சொல்லலாம், சிரிக்கச் சிரிக்கச் சொல்லலாம், கோபம் வர, ஆர்வம் வர, வெறுப்பு வர... படிபபவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.

12. இவ்வளவு விஸ்தாரமாக அறுதியிடப்படும் சிறுகதைகளில் பொது அம்சம் என்று எதுவு்ம் இருக்காதே?

இருக்கிறது. ஒரே ஒரு பொது அம்சம்தான் எனக்குத் தெரிந்தது. படித்த இரண்டு நிமிடத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையில்லை- பஸ் டிக்கெட்! ஒரு வாரம் கழித்தோ, ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவர்களிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதைகளில் உள்ள பொதுவான அம்சம்.

13. எப்படிச் சொல்கிறீர்கள்?

அனுபவத்தில்தான். நான் 1979ல் எழுதிய சிறுகதைகளை இப்போது யாராவது நினைவு வைத்துக் கொண்டு சொல்லும் போது எனக்கு வேறு எந்தச் சான்றிதழும் தேவையில்லை.

14. எனவே?

நல்ல சிறுகதைகள் காலத்தையும், அன்றாட அவசரத்தையும் கடக்கின்றன.

15. இது பேருக்குப் பேர் வேறுபடும் அல்லவா?

நிச்சயம். எனக்கு நல்ல கதை உங்களுக்கு நல்ல கதையாக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லை. ஒரு கதை உங்களை எந்த விதத்திலும் பாதித்திருந்தால் ஒரு மாதம் அல்லது ஒரு வருடம் விட்டுக்கூட அதை உங்களால் திருப்பிச் சொல்ல முடியும்.

16. அப்படியென்றால், நல்ல ஞாபகம் உள்ளவர்கள் நல்ல ரசிகர்கள் என்பீர்களா?

இது ஞாபகப் பிரச்னை அல்ல. கதையின் பெயர்கள், இடம், பொருள், ஏற்பாடெல்லாம் ஞாபகம் இருக்க வேண்டியதில்லை. ஆனால் கதையின் அடிநாதம். அதில் பாதித்த ஒரு கருத்தோ, வரியோ நிச்சயம் நினைவிருக்கும்.

17. அப்படி நினைவு இல்லையென்றால்?

அப்படி இல்லையென்றால் அந்தக் கதை உங்களைப் பொறுத்தவரை தோல்விதான்.

18. இதை வாசகருக்கும் எழுத்தாளருக்கும் உள்ள ஏற்பாடு என்று ‌‌சொல்லலாமா?

ஒரு நட்பு என்று சொல்லலாம். ஒரு வாசகர் தனக்குப் பிடித்தமான எழுத்தாளரை ஒரு நண்பரைப் போல் தேர்ந்தெடுக்கிறார். காரணம், அவர் எழுதுவது இவருக்குப் புரிகிறது. கதையின் ஏதோ ஒரு பகுதியை வாசகரால் தன் மனத்தில் மீண்டும் வாழ விட முடிகிறது. அந்த எழுத்தாளர் அந்த வாசகரின் வாழ்வின் குறையை ‌ஏதோ ஒரு விதத்தில் நிரப்புகிறார்.

19. அதற்குக் கதை புரிய வேண்டும் அல்லவா?

ஆம். கதை வாசகருக்குப் புரிய வேண்டியது மிக முக்கியம் எனக் கருதுபவன் நான்.

20. சிலர் புரியாமலேயே கதை எழுதுகிறார்களே?

அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.

                                                                                    -ஜூனியர் போஸ்ட், 27.3.1998

33 comments:

  1. நல்ல சிறுகதைகள் காலத்தையும், அன்றாட அவசரத்தையும் கடக்கின்றன.
    அவர் நினைவுகளும் அப்படியே..சில சமயங்களில் சுஜாதா இறந்து விட்டதை மனம் ஏற்று கொள்ள மறுப்பது வியப்பாய் கூட இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இந்த விஷயம் உண்மைதான். எனக்கும சிலசமயம் இப்படித் தோன்றியதுண்டு. நற்கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  2. சிறப்பான கட்டுரை பதிவாக்கி தந்தமைக்கு நன்றி நட்பே.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி தென்றல்.

      Delete
  3. நல்ல பகிர்வு. சென்ற வாரம் தான் இந்தப் புத்தகத்தையும் இன்னும் சில்வற்றையும் உடுமலை.காம்-ல் ஆர்டர் செய்தேன். இன்னும் வரவில்லை! :(

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பாருங்கள். நல்ல ரசனையைத் தரும். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  4. சிற்ப்பான கட்டுரை.நம்மிப்பொன்ற பதிவுலகத்தினருக்கு உபயோகமான கட்டுரை.திரட்டிட்டித்தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட தங்கைக்கு என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  5. புதிய முகப்பு அருமை.

    சுஜாதா என்ற பெயர் பார்த்ததுமே ஓடி வந்துவிட்டேன். சுஜாதா தாட்ஸ் புத்தகம் படித்துள்ளேன். அதில் இந்த கட்டுரை படித்த நியாபகம் இல்லை. இருந்தும் இங்கே படித்தது சூப்பர்.


    //நூற்றாண்டுக் காலத்தையோ, சில நிமிடங்களையோ சொல்லலாம்.//
    //படிபபவருக்கு ஒன்பதில் ஏதேனும் ஓர் உணர்ச்சியைத் தந்தால் போதும்.//
    //அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.//

    தலைவா நீ இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாய். உன்னை பற்றி ஒவ்வொருவரும் பகிரும் பகிர்வில் உன் இருப்பை ரசித்து மகிழ்கிறேன்...

    சின்ன வாத்தியாரே, வாத்தியாரை நினைவு படுத்தி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. வாத்தியாரை ரசித்துப் படித்து மகிழ்ந்து கருத்திட்ட சீனுவுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  6. நல்லதொரு கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி சார் !

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  7. //படித்த இரண்டு நிமிடத்தில் மறந்து போய்விட்டால் அது சிறுகதையில்லை- பஸ் டிக்கெட்! ஒரு வாரம் கழித்தோ, ஒரு வருடம் கழித்தோ ஞாபகம் இருந்து அதை மற்றவர்களிடம் மாற்றியோ மாற்றாமலோ சொல்ல வைப்பது நல்ல கதைகளில் உள்ள பொதுவான அம்சம்.//

    ;)))))

    மிகவும் சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. தமிழ் மணத்தில் புகும் போது இது தட்டுப்பட்டுது. இன்று தான் புகுந்தேன். மிக நல்ல ஆக்கம். பயனுள்ளது. பக்கச் சட்டம் அழகாக உள்ளது..
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வலையையும், ஆக்கத்தையும் ரசித்துப் பாராட்டிய உஙகளுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  9. அருமையான கட்டுரையை பதிவாக்கித்
    தந்தமைக்கு மனமார்ந்த நன்றி
    மேய்ச்சல் நிலம் செழிப்பமாகத்தான் இருக்கிறது
    பசித்தவர்கள் தொடர்ந்து மேயவருகிறோம்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரமணி ஸார்... மைதானத்தில் உங்களுக்கு ரெட் கார்பெட் வெல்கம். செழிப்பாய் இருக்கிறது என்ற உங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.

      Delete
  10. Replies
    1. மிக்க நன்றி ஸ்ரீராம்.

      Delete
  11. நல்ல கட்டுரையை இங்கு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சார்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  12. Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  13. அருமை.

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பகிர்வை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி டீச்சர்,

      Delete
  14. Sujatha is One of the best writer in india .
    Thank u ganesh sir for sharing.

    ReplyDelete
    Replies
    1. சுஜாதாவின் எழுத்தை ரசித்து என்னைப் பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  15. பசித்த புலி தின்னட்டும்.. :) சுஜாதா டச்!

    ReplyDelete
    Replies
    1. அவரின் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் தன் தனி முத்திரையை பதிக்கத் தவறியதில்லை சுஜாதா. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  16. உண்மையில் சரியான ஒரு கட்டுரையைத் தான் பரிந்துரைத்துள்ளீர்கள் நன்றி...

    அன்புச் சகோதரன்
    ம.தி.சுதா
    ஏழை மாணவன் ஒருவனை கரை ஏற்ற வாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்து கருத்திட்ட உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete