கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Tuesday, October 4, 2016


1982ம் ஆண்டு நான் பள்ளி மாணவனாக இருந்தபோது ‘கமலம்’ பத்திரிகையின் முதல் இதழ் வெளியானது. சரித்திரக்கதை வித்தகர் சாண்டில்யன் அவர்கள் ஆசியராகப் பொறுப்பேற்றிருந்தார். அவரது கதைகள் எதுவும் அதுவரை படித்திராததால் அவர் எத்தனை பெரிய எழுத்தாளர் என்பது எனக்குக் கிஞ்சித்தும் தெரியாது. ‘சாண்டில்யனின் கதாபாத்திரங்கள் உங்களுடன் பேசுகிறார்கள்’ என்று தலைப்பிட்டு யவனராணி பேசுவதாக ஒரு கட்டுரை முதல் இதழில் வந்திருந்தது. இரண்டாம் இதழில் மஞ்சளழகி பேசுவதாக ஒரு கட்டுரை. இரண்டையும் படித்தேன். சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. என்றாலும் யார் இந்த யவனராணி, மஞ்சளழகி என்பது புரியாத நிலையில் மனதில் தங்கவில்லை. பின்னாளில் சாண்டில்யனை முழுமையாகப் படித்து ரசித்த சமயங்களில்தான் இந்தக் கட்டுரைகளையும் அதன் முழு வீச்சுடன் ரசிக்க முடிந்தது.

முதல் சில இதழ்களிலேயே சாண்டில்யன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். அதன்பின் இருகூரான் என்பவர் ஆசிரியராக இருந்து சிலமாதங்கள் வெளியானது. அதன்பின் அந்த வார இதழ் வரா இதழானது. சாண்டில்யன் விலகியதுமே இந்தக் கதாபாத்திர உரையாடல் தொடர் வெளிவராமல் போனது. அது பெரிய விஷயமல்ல... அவர் அந்த இதழில் தொடங்கியிருந்த ‘கடல் நீலி’ என்கிற தொடர்கதையும் பாதியில் நின்று போனது.

சாண்டில்யனின் ‘ராஜதிலகம்’ வாசித்திருக்கிறீர்களா? அற்புதமான நாவல். காஞ்சி கைலாசநாதர் கோயிலைக் கட்டிய ராஜசிம்ம பல்லவன் இளவரசனாக இருந்து சாளுக்கியர்களை வெற்றி  கொண்ட வரலாற்றை விவரிக்கிற கதை அது. பின்னாளில் ராஜசிம்மன் ஆட்சிக்கு வந்ததும் சீனம் வரை சென்று பல வெளிநாடுகளிலும் வெற்றிக் கொடி நாட்டினான். ”எனக்கு ஆயுளும் சமயமும் வாய்த்தால் பின்னொரு சமயம் அதை எழுதுகிறேன்.” என்று சாண்டில்யன் அத்தொடரை நிறைவு செய்கையில் குறிப்பிட்டிருந்தார். 

கமலம் இதழில் அந்த வரலாற்றைத்தான் அவர் எழுத ஆரம்பித்திருந்தார். ராஜசிம்ம பல்லவன் (இரண்டாம் நரசிம்மன்) மன்னனாக தன் இரு தேவியர்களுடன் வர, வேறோர் இளைஞனைக் கதாநாயகனாக வைத்துத் துவங்கி இருந்தார். அது பாதியில் நின்று விட்டது மிகப்பெரிய சோகம். 

பின்னாளில் அவர் உடல்நலக் குறைவுற்று நீண்ட மருத்துவமனை வாசத்திற்குப் பின் மீண்டு வந்ததும் குமுதம் வார இதழில் ‘சீன மோகினி’ என்ற தலைப்பில் அதே சரித்திரத்தை ராஜசிம்மன், அவன் தேவியர் தவிர வேறு பாத்திரங்களை மாற்றி புதிதாக எழுதத் தொடங்கினார்.  இம்முறையும் பாதியில் நின்று விட்டது அந்தச் சரித்திரக் கதை. காரணம் காலன் அவசரப்பட்டு அவரைக் கவர்ந்து சென்று விட்டதால்.
இரண்டு முறையும் கால் பகுதிகூட வராமல் அக்கதை நின்றுவிட்டதில் ஆர்வமுடன் படித்து வந்த வாசகனாக எனக்கு மிக வருத்தம்தான். ‘சீன மோகினி’ வந்த குமுதப் பிரதிகள் என்னிடமில்லை. ஆனால் யவனராணியின் உரையும், கடல் நீலியின் முதல் அத்தியாயமும் இங்கே உங்களுக்காகத் தந்துள்ளேன். படியுங்கள், ரசியுங்கள், ரசித்ததைக் கூறுங்கள்.




7 comments:

  1. அறியாத தகவல்கள் அண்ணா...

    ராஜதிலகம் வாசிக்க ஆவல்... கடல் புறா வாசிப்பில்... முடித்ததும் ஆரம்பிக்கிறேன்...

    ReplyDelete
  2. தெரியாத தகவல்கள்! சீன மோகினி என்ற தலைப்பை குமுதத்தில் சிறுவயதில் கண்ட ஞாபகம் லேசாக இருக்கிறது!

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்கள்.

    மேய்ச்சல் மைதானத்தில் மீண்டும் உலவ முடிந்ததில் மகிழ்ச்சி. தொடருங்கள் கணேஷ்.

    ReplyDelete
  4. ஆஹா..பழசை கிளறீங்களே வாத்தியாரே..!

    ReplyDelete
  5. Hi

    I am having cheena mohini binding version

    ReplyDelete
    Replies
    1. enakku konjam kudungalen sir pls.......

      Delete
  6. கடல் நீலி, சீன மோகினி கேள்விப்பட்டதேயில்லை இவ்வளவு சுவாரஸ்யமான இந்த தளம் ஏன் தொடராமல் நின்று போனது? முடியாமல் நின்று போனது என்கிற கதையை ஒருவர் பைண்ட் செய்து வைத்திருக்கிறேன் என்கிறாரே..

    ReplyDelete