கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, April 12, 2013

 பகிர்வதற்கு ஜோக்குகள், ரசித்த படங்கள், மற்றுமொரு ஓஹென்றியின் படக்கதை என நிறைய விஷயங்கள் இருப்பினும், தொடர்கதை விட்டு விட்டுப் போடுவதால் படிக்கும் சுவாரஸ்யம் குறைய வாய்ப்புண்டு என்பதை உணர்வதால் எஞ்சிய நான்கு அத்தியாயங்களையும் தொடர்ந்து வெளியிட்டு இந்த ‘பதியைக் கொன்ற பாவை’யை முடித்து விடலாம் என்று நினைக்கிறேன். சரிதானே...! ஆகவே இனி தொடர்ந்து க்ளைமாக்ஸ் வரை போய்விடலாம்!

                                     9.பரஞ்சோதியை எதிர்கொண்ட பயங்கரம்

சில வினாடிகள் அந்த நெருப்புக் கோளங்களையே வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் பரஞ்சோதி. அவருக்கு சந்தர் கூறியது நினைவிற்கு வந்தது. ஏதோ மிருகம் மனோகரைத் தின்று விட்டதென்று, அவர் உடல் சிலிர்த்தது. அந்த நெருப்புக் கோளங்கள் சிறிது சிறிதாக பெரிதாகிக் கொண்டே வந்தன.

சட்டென்று தனது டார்ச் விளக்கை அந்தத் திசையில் ஒளியைப் பாய்ச்சுமாறு செய்தார் பரஞ்சோதி, ஆனால் அந்த நெருப்புக் கோளங்கள் மறைந்து விட்டன. அது என்னவாக இருக்குமென்ற சிந்தனையில் ஆழ்ந்தார் பரஞ்சோதி. சில வினாடிகளில் வேறொரு திசையில் அந்த நெருப்புக் கோளங்கள் தோன்றின. பிறகு மீண்டும் மறைந்து அவர் கால் அருகே காட்சியளித்தது. டார்ச் விளக்கின் ஒளியில் அதைப் பார்த்த பரஞ்சோதி பிரமை தட்டிப் போய் விட்டார்.

மூன்றடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட ராட்சஸ எலிதான் அது! அதை பரஞ்சோதி பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே, அது அவர் குரல் வளையை நோக்கிப் பாய்ந்தது. பரஞ்சோதி அதைப் பிடித்துத் தள்ளப் பார்த்தார். அந்த எலியின் குறி தவறியதினால் அவரது ஷர்ட்காலரை தனது கூரிய பற்களால் கவ்வி இழுத்தது. கொஞ்சம் பரஞ்சோதி அசட்டையாக இருந்திருந்தால் அவர் குரல் வளையில் கடித்துக் குதறி இருக்கும். தன் பலங்காண்ட மட்டும் அதை அறைந்தும், குத்தியும் பார்த்தார். ஆனால் அதனாலெல்லாம் அது பயந்து ஒடுவதாகத் தெரியவில்லை. அருகே கிடந்த சில கற்களை எடுத்து அதன்மீது வீசினார் பரஞ்சோதி.

அதன் பிறகு அந்த எலி எங்கே போயிற்றென்று அவருக்குத் தெரியவில்லை. அவரது டார்ச்சும் மிகவும் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அது அணைந்து விடுமென்று புரிந்து கொண்டார் அவர். அங்கிருந்து தப்புவதற்கு ஏதாவது வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தார் பரஞ்சோதி. ஆனால் அவரைப் பிணைத்திருந்த சங்கிலி மிகவும் வலுவுள்ளதாகத் தோன்றியது. அங்கே கிடந்த கற்கள் மிகவும் சிறியவை. எனவே அவற்றால் அந்தச் சங்கிலியை தகர்க்க முடியாதென்று அவருக்குத் தெரியும். அதனால் வேறு ஏதாவது மார்க்கம் இருக்கிறதா என்று பார்த்தார். வேறு எந்த வழியும் புலப்படவில்லை.

இன்னும் எத்தனை எலிகள் அங்கே இருக்கின்றனவோ என்று வியந்தார் பரஞ¢சோதி. அவை ஒன்று திரண்டு வந்தால் தன்னால் சமாளிக்க முடியுமா என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. கட்டப்பட்ட இந்த நிலையில் தன்னால் எவ்வளவு நேரம் தாக்குப்பிடிக¢க முடியும் என்று யோசித்தார். தன்னை இம்மாதிரி கட்டிப் போட்டதற்குப் பதிலாக தன்னைக் கொலை செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று அவருக்குத் தோன்றியது. தான் இந்தப் பயங்கர எலியினால் கடிபட்டு, சித்ரவதைக்கு ஆளாகி சாக வேண்டுமென்றுதான் பாஸ்கர் விரும்பி இருக்கிறான்.

அவருக்கு உடனே மனோகரின் நினைவு வந்தது. பாவம்! அவன் எவ்வளவு சித்ரவதைகளை அனுபவித்திருப்பான். உயிரோடும், உணர்ச்சியோடும் இருக்கும்பொழுது இவ்வாறு எலிகள் ஒரு மனிதனைக் கடித்துக் குதறினால் அவனுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும்! இத்தகைய தண்டனையைப் பெற அவன் என்ன குற்றம் செய்திருப்பானென்று யூகிக்க முயன்றார் பரஞ்சோதி. ஆனால் அவருக்கு ஒன்றும் புலப்படவில்லை. சுசீலாவிடமாவது, தான் எங்கே போகிறோமென்பதைக் கூறி விட்டு வந்திருந்தால் ஒருக்கால் தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காதென்று அவருக்குத் தோன்றியது. ஆனால் அடுத்த கணம் அவளால் என்ன உதவி செய்திருக்க முடியுமென்றும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். .

தனக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் எலியினால் தொந்தரவு ஏற்படுமென்று அவருக்கு நிச்சயமாகத் தெரிந்தது. இருந்தபோதிலும் அவர் இருந்த நிலையில் சிந்தனை செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. அவருக்குத் திடீரென்று சந்தியாவின் நினைவு வந்தது. அன்று காலை தினசரியில் அவளைப் பற்றிய செய்தி வந்திருந்தது. ஆனால் அவளைக் கொலை செய்தது யாராக இருக்குமென்று போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அதில் காணப்பட்டது. பவானியின் பிரேதமும் கண்டுபிடிக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும் குற்றவாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், கூடிய விரைவில் இரண்டு கொலைகளையும் செய்த நபரையோ, நபர்களையோ கண்டுபிடித்து விடுவதாகவும் போலீசார் உறுதி அளித்திருந்தனர். சந்தியாவின் பிணத்தையும், பவானியின் பிணத்தையும் கண்டுபிடித்த போலீசார் இன்னும் கொஞ்ச நேரத்தில் வேணுவின் பிணத்தையும் கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் அவர்கள் எல்லாரும் கொலை செய்யப்படுவதற்கு முன்பே இங்கு கொண்டு வந்து அடைக¢கப்பட்ட மனோகரைப் பற்றிப் போலீசாருக்குத் தெரியாது. தன்னையும் போலீசாரால் கண்டுபிடிக¢க முடியாது. நல்ல இடமாகத்தான் தேர்ந்தெடுத்துத் தன்னை அடைத்திருக்கிறார்கள் என்று நினைத்தார்.

அவர் கட்டளைப்படி தமயந்தியின் ஜாகையை ராஜு இப்பொழுது கண்காணித்துக் கொண்டிருப்பான். சுசீலா ஆபிசிலேயே அவர் வருகைக்காகக் காத்துக் கொண்டிருப்பாள். தான் உயிருடன் திரும்பிச் சென்று அவளைப் பார்ப்பாமோ என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. ராஜுவிடம், தமயந்தியின் ஜாகையைக் கண்காணிக்கச் சொன்னதற்குப் பதிலாக பாஸ்கரின் ஜாகையைக் கண்காணிக்கச் சொல்லி இருந்தால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று அவருக்குத் தோன்றியது. இருந்த போதிலும் இப்பொழுது அவர் செய்யக்கூடியது ஒன்றுமில்லை. பாஸகருக்கும், சுந்தருக்கும்தான் அவர் அங்கே அடைபட்டிருப்பது தெரியும். ஆனால் அவரைக் காப்பாற்றக் கூடியவர்கள் யாருமில்லை.

சுந்தர் இளகிய மனம் படைத்தவன் என்றே அவருக¢குத் தோன்றியது. இருந்தபோதிலும் அவன் திரும்பி வந்து தன்னைக் காப்பாற்றுவான் என்ற எண்ணம் அவருக்கு இல்லை. ஏனென்றால் பாஸ்கரின் கட்டளையை அவன் நிறைவேற்றாவிட்டால் சிறிதும் ஈவிரக்கமில்லாமல் சுந்தரைக் கொன்று விடுவான் பாஸ்கர் என்று அவருக்குத் தெரியும். தனக்காக, இருபது ரூபாயைப் பெற்றுக் கொண்டு சாவி கொடுத்த வேணுவை தனக்குத் தெரிந்தே பாஸ்கர் சுட்டுக் கொன்றதையும் எண்ணிப் பார்த்தார் பரஞ்சோதி. வேணுவின் மரணத்திற்குத் தான்தான் காரணமென்று அவர் மனச்சாட்சி உறுத்தியது. ஒருக்கால் தன்னை எதிர்பார்த்தே, சுந்தரை வேணுவுக்குத் தெரியாமல் கொண்டு வந்து அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு வெளியே போவதாகவும், தான் திரும்பி வர ஒருமணி நேரமாகும் என்றும் பாஸ்கர், வேணுவிடம் கூறிவிட்டுச் சென்றிருக்க வேண்டும்.

மெதுவாக எழுந்து நிற்க முயன்றார் பரஞ்சோதி. ஆனால் அவரைப் பிணைத்திருந்த சங்கிலி சிறியதாக இருந்ததால் அவராக எழுந்து நிற்க முடியவில்லை. அதனால் மீண்டும் கீழே உட்கார்ந்து கொண்டார் பரஞ்சோதி. அங்கிருந்து தப்பிச் செல்வதென்பது முடியாத காரியமென்று அவருக்குத் தோன்றியது. வரப் போகும் ஆபத்தை எதிர்பார்த்து அங்கே காத்துக் கொண்டிருப்பதைத் தவிர அப்பொழுது அங்கே செய்யக்கூடியது ஒன்றுமில்லை. சிலவினாடிகளில், ஒரு ஜோடி நெருப்புக் கோளங்கள் தோன்றின. ஒரு எலி வருகிறதென்பதைப் புரிந்து கொண்ட பரஞ்சோதி அதைச் சமாளிப்பதற்காகத் தன்னைத் தயார் செய்து கொண்டார். தனக்கருகே கிடந்த கற்களில் சிலவற்றைத் தன் கைகளால் துழாவி எடுத்து வைத்துக் கொண்டார். டார்ச் விளக்கை உபயோகிக்க அவர் விரும்பவில்லை. இருட்டிலேயே தனது எதிரியைச் சமாளிப்பதென்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.

ஆனால் இரண்டு நெருப்புகள் தோன்றிய இடத்தில் இப்பொழுது எட்டு நெருப்புக் கோளங்கள் காட்சியளித்ததைக் கண்டதும் பரஞ்சோதியின் இரத்தம் உறைந்து விடும் போல இருந்தது. தன்னைத் தாக்குவதற்கு நான்கு எலிகள் வந்துள்ளன என்பதைப் புரிந்து கொண்டதும் அவர் கதி கலங்கிப் போய் விட்டார்.

அந்த எலிகள் மெதுவாகப் பரஞ்சோதியை நோக்கி நகர்ந்தன. தன்னிடமிருந்த கற்களை, அவற்றை நோக்கி வீசினார். உடனே அந்த எலிகள் பயங்கரமாகத் கத்தியபடி அங்குமிங்கும் ஓடின. பிறகு, மீண்டும் பரஞ்சோதியை நோக்கி ஓடிவந்தன. அவற்றை பயமுறுத்துவதற்காக அவர், தனது பலங் கொண்ட மட்டும் பலவிதமான சத்தங்களை எழுப்பினார். அதனால் அவர் தொண்டை வலித்த போதிலும், அந்த எலிகள் அந்தக் கூச்சலைக் கேட்டு பயந்து போய் சில அடி தூரம் பின்னால் சென்று நின்று கொண்டு பரஞ்சோதியை தங்களது பயங்கர விழிகளால் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. பரஞ்சோதி விடாமல் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். அந்தச் சமயத்தில், "பரஞ்சோதி! பரஞ்சோதி! எங்கே இருக்கிறீர்கள்?" என்று சுசீலாவின் குரல் எங்கிருந்தோ ஒலித்தது.

                                                                                                  -இன்னும் வரும்...!

2 comments:

  1. எலிகள் என்று எதிர்ப்பார்க்கவேயில்லை... பயத்துடன் பயங்கரத்துடன் செல்கிறது...

    ஆவலுடன் காத்திருக்கிறேன்... ஆரம்பத்தில் சொன்னபடி முடித்து விடுங்கள்...

    ReplyDelete
  2. நிச்சயம் பரஞ்சோதி தப்பித்துவிடுவார் என்பது தெரிந்தாலும் எப்படி தப்பித்தார் என அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete