கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, April 15, 2013

                                      10. மர்மப் பெண்ணின் எச்சரிக்கை

அந்தப் பயங்கரச் சூழ்நிலையில் சுசீலாவின் குரல் ஒலித்தது பரஞ்சோதிக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது. ‘‘நான், கீழே பாதாள அறையில் இருக்கிறேன்’’  என்று தன் பலங்கொண்ட மட்டும் கூச்சலிட்டார் பரஞ்சோதி. அதைத் தொடர்ந்து எங்கோ கல் உருளும் ஓசை கேட்டது. சுசீலா வருவதற்கு உதவியாளர் தனது டார்ச் விளக்கைப் பொருத்தி வைத்தார் அவர். அந்த ஒளியைக் கண்டு அஞ்சிய எலிகள் ஓடி விட்டன.

சில வினாடிகளில் வேறொரு டார்ச் விளக்கின் ஒளி அந்தப் பாதாள அறையின் வாயிலில்தோன்றியது. ‘‘பரஞ்சோதி! எங்கே இருக்கிறீர்கள்?’’ என்ற சுசீலாவின் குரலும் அதைத் தொடர்ந்து ஒலித்தது. ‘‘இங்கேதான் இருக்கிறேன். சுசீலா! சீக்கிரம் வா’’ என்று அவசரத்தோடும், அச்சத்தோடும் பரஞ்சோதியின் குரல் ஒலித்தது.

இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த எலிகள் வந்துவிட்டால் சுசீலாவையும் அவை பிடித்துக் கொண்டு விடுமே என்று அவருக்குப் பயமாக இருந்தது. இதற்குள் அவரருகே வந்த சுசீலா ‘‘இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், பரஞ்சோதி!’’ என்று கேட்டவள், அவர் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டதும் பதறியவளாக, ‘‘அடக் கடவுளே, என்ன இது?’’ என்று கேட்டவாறு அந்தச் சங்கிலியைக் கழற்ற முடியுமா என்று பார்த்தாள்.

‘‘உன்னிடம் கைத்துப்பாக்கி இருக்கிறதா, சுசீலா?’’ என்று கேட்டார் பரஞ்சோதி.

தனது கைப்பையிலிருந்து ஒரு சிறிய கைத்துப்பாக்கியை எடுத்து அவரிடம் கொடுத்தாள் சுசீலா. அதன் உதவியால் சங்கிலியைத் தகர்க்க முடியுமா என்று பார்த்தார் பரஞ்சோதி. அந்தச் சங்கிலியின் அருகே பிணைக்கப்பட்டிருந்த பூட்டில் ஒரு முறை சுட்டார். ஆனால் அது ஒன்றும் ஆகவில்லை. அந்தச் சிறிய அறையில் அவர் சுட்டதினால் மகா பயங்கரமான சத்தம் எழுந்தது. அந்த அதிர்ச்சியில் மனோகரின் எலும்புகள் சரிந்தன. மீண்டும் ஒருமுறை பரஞ்சோதி சுட்டதும் அந்தப் பூட்டு உடைந்து விழுந்தது. இப்பொழுது ஏற்பட்ட அதிர்ச்சியில் மனோகரின் எலும்புகள் மேலும் சரிந்தன.

அந்தச் சத்தத்தைக் கேட்ட சுசீலா தனது டார்ச் விளக்கின் ஒலியை அந்தத் திசையில் பாய்ச்சினாள். அந்த இடத்தில் கிடந்த மனித எலும்பினைக் கண்டதும் பயத்தால் வீரிட்டவளாய் பரஞ்சோதியின் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். உடல் வெடவெடவென நடுங்கியது. ஆதரவோடு அவள் கரத்தைப் பற்றிய பரஞ்சோதி, ‘‘நாம் இப்பொழுது கூடிய விரைவில் இந்த இடத்தை விட்டு வெளியே சென்று விட வேண்டும். சீக்கிரம் வா’’ என்று கூறியபடி அவளை அழைத்துக் கொண்டு, சுந்தர் சென்ற வழியாக அழைத்துச் சென்றார்.
ஆனால் சிறிது தூரம் சென்றதும் அந்த வழி முடிந்து விட்டது. அதைக் கண்டதும் அவருக்கு ரொம்ப ஆச்சரியமாகப் போய் விட்டது. இருந்த போதிலும் வேறொரு வழியாக நடக்க ஆரம்பித்தார்.

அது எங்கேயோ வளைந்து வளைந்து சென்றது. ஆனால் வெளியே செல்வதற்கு மட்டும் வழி கிட்டவில்லை. வெகு நேரம் வரை இருவரும் அங்கிருந்த சுரங்கப் பாதைகளில் அலைந்து அலைந்து களைப்படைந்து விட்டனர். இருந்த போதிலும் எந்த வழியாக வெளியே செல்வதென்பது இருவருக்கும் தெரியவில்லை.

‘‘என்னால் இனி ஒரு அடி கூட நகர முடியாது’’ என்று கூறியவாறு தள்ளாளடிய சுசீலா, அப்படியே கீழே உட்கார்ந்து விட்டாள்.
பரஞ்சோதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவருக்கும் கால்கள் ரொம்ப வலித்தன. தன்னோடு சேர்ந்து சுசீலாவும் இங்கே வந்து மாட்டிக் கொண்டாளே என்று அவருக்கு மிகவும் சஙகடமாக இருந்தது. அவரது டார்ச் விளக்கு அணைந்து போய்விட்டது. சுசீலாவின் டார்ச்சும் மங்கிக் கொண்டே வந்தது. அந்தச் சுரங்கப்பாதை முழுவதும் கும்மிருட்டாக இருந்தது. எந்த நேரத்திலும் அந்த எலிகள் இங்கே வரக் கூடுமென்ற அச்சம் பரஞ்சோதிக்கு ஏற்பட்டது.

சுசீலா கொண்டு வந்த கைத்துப்பாக்கியில் இன்னும் நான்கு தோட்டாக்கள் தான் இருந்தன. நிறைய எலிகள் வந்து விட்டால் சுசீலாவையும் வைத்துக் கொண்டு சமாளிப்பது கஷ்டமென அவருக்குத் தோன்றியது. அந்தச் சமயத்தில் பல எலிகள் கூச்சலிட்டுக் கொண்டு வரும் சத்தம் கேட்டது.

கதி கலங்கிப் போன பரஞ்சோதி ‘‘சுசீலாவின் கையைப் பிடித்து இழுத்தபடி ‘‘ஆபத்து சீக்கிரம் ஓடி வா’’ என்று கூறி ஓட ஆரம்பித்தார்.
அவர் குரலில் ஒலித்த கலவரத்தைக் கண்ட சுசீலா அச்சத்தோடு அவரைப் பின் தொடர்ந்து ஓடினாள். சிறிது தூரம் சென்றதும் ஒரு மேடான இடம் காட்சியளித்தது. தரையிலிருந்து இரண்டடி உயரத்திலிருந்த அந்த மேடையின் மீது ஏறிய பரஞ்சோதி, சுசீலாவும் அதன் மீது ஏற உதவி செய்வதவராய் திரும்பி, தாங்கள் ஓடி வந்த சுரங்கப்பாதையைப் பார்த்தார்.

சிறிது தூரத்தில் நூற்றுக்கணக்கான எலிகள் கூச்சலிட்டபடி வந்து கொண்டிருந்தன. அவற்றைக் கண்டதும் சுசீலா வீரிட்டாள். மயங்கி விழுந்து விடாமலிருக்க அவள் வெகுவாக சமாளிக்க வேண்டி இருந்தது. ‘‘சீக்கிரம் வா, சுசீலா!’’ அவை நம்மைக் கடித்துக் குதறி விடும்’’ என்று கூறியபடி அவள் கரத்தைப் பிடித்து இழுத்தபடி ஓட ஆரம்பித்தார்.

அந்த இடம் ஒரு அறையைப் போலிருந்தது. அதனுள் பல கள்ளிப் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கே சில எலிகள் ஓடி வந்து கொண்டிருந்தன. உடனே தனது துப்பாக்கியால் ஒரு எலியை நோக்கிச் சுட்டார் பரஞ்சோதி. உடனே அந்த எலி பயங்கரமாக அலறிக் கொண்டு தரையில் உருண்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி மற்ற எலிகள் பயந்து பின் வாங்கவில்லை. அதற்கும் மாறாக அவை இன்னும் வேகமாக பரஞ்சோதியை நோக்கி ஓடி வந்தன.

ஒரு கணம் என்ன செய்வதென்று பரஞ்சோத¤க்குத் தெரியவில்லை. பிறகு சட்டென்று அந்த அறையின் உட்புறம் திரும்பி, அங்கிருந்த கள்ளிப் பெட்டிகளை அந்த அறையின் வாசலை நோக்கி நகர்த்த ஆரம்பித்தார். சுசீலாவும் அவரோடு சேர்ந்து அவற்றை நகர்த்தினாள்.
திடீரென்று வீரிட்டாள் சுசீலா. சட்டென்று திரும்பினார் பரஞ்சோதி. அங்கே, சுசீலாவின் புடவை முந்தானையில் ஒரு எலி தொற்றி ஏறிக் கொண்டிருந்தது. வேகமாக அவளருகே ஓடி அந்த எலியைப் பிடித்திழுத்து வெளியில் வீசியெறிந்தார் பரஞ்சோதி.

பிறகு மீண்டும் கள்ளிப் பெட்டிகளை நகர்த்த ஆரம்பித்தார். இன்னும் ஒரு சிறிய ஓட்டைதான் இருந்தது. அதை அடைக்க அவர் ஒரு கள்ளிப் பெட்டியை இழுத்துக் கொண்டு போனபோது ஒரு எலி உள்ளே பாய்ந்து அவர் கையைக் கடித்து விட்டது. மிகச் சிரமப்பட்டு அந்த எலியைப் பிடித்து வெளியே வீசிய பரஞ்சோதி, கடைசிப் பெட்டியையும் வைத்து அந்த வாசலை அடைத்து விட்டார். சுசீலா தனது புடவைத் தலைப்பிலிருந்து ஒரு துண்டு கிழித்து பரஞ்சோதியின் கையில் கட்டுப் போட்டாள். இருவரும் ரொம்பக் களைத்துப் போயிருந்தனர். எனவே கொஞ்ச நேரம் ஒன்றும் பேசாமல் ஓய்வெடுத்துக் கொண்டனர்.

எப்படி அந்த அறையிலிருந்து தப்பப் போகிறோமோ என்று யோசனை செய்து கொண்டிருந்தார் பரஞ்சோதி. பிறகு எழுந்து ஒரு கள்ளிப் பெட்டியைத் திறந்து பார்த்தார். அதற்குள் பல வெளிநாட்டு மது பாட்டில்கள் இருந்தன. பாஸ்கரின் கள்ளக் கடத்தல் பொருள்கள் இந்த அறையில் தான் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொண்டார் அவர்.

‘‘நான் இங்கே இருப்பதாக உனக்கு யார் தகவல் கொடுத்தார்கள்?’’ என்று கேட்டார் பரஞ்சோதி.

‘‘உங்களை வெகு நேரமாகியும் காணவில்லையே என்று நான் என் வீட்டிற்குப் போகலாம் என்று கிளம்பும் போது டெலிபோன் அடித்தது. தங்கள்தான் பேசுகிறீர்களோ என்று ஆவலோடு வந்து எடுத்தேன். ஆனால் யாரோ ஒரு பெண் பேசினாள். துப்பாக்கி டார்ச் முதலியவைகளை எடுத்துக் கொண்டு உடனே நான் ஊர் எல்லையிலிருக்கும் பாழடைந்த மாளிகைக்கு வந்தால் உங்களை உயிரோடு பார்க்க முடியுமென்றும், நான் தாமதப்படுத்தும் ஒவ்வொரு விநாடியும் உங்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் என்று கூறினாள். அவள் யாரென்று நான் கேட்டதற்கு, அதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அநாவசியம் என்று கூறி டெலிபோனை  வைத்து விட்டாள். நான் உடனே இங்கே புறப்பட்டு வந்தேன்.’’

‘‘நீ காரில் வந்தாயா?’’

‘‘இல்லை, அந்தப் பெண், என்னைக் காரில் வரக்கூடாதென்றும், ஒரு வாடகைக் காரில் வர வேண்டுமென்றும் கண்டிப்பாகக் கூறினாள். அதனால் நான் வாடகை காரில் வந்தேன். நான் வந்து வெகு நேரம் உங்களைத் தேடினேன். பிறகுதான் தங்கள் கூச்சலிட்ட சத்தம் கேட்டதும் உங்களைக் கண்டு பிடித்தேன்.’’ என்று கூறினாள்.

பிறகு அவளே தொடர்ந்து, ‘‘வெகு நேரம் நான் அங்கே தேடினேன். பிறகு யாராவது என்னை ஏமாற்றுவதற்கு இம்மாதிரி கதையளந்திருப்பார்களோ என்ற சந்தேகம் எனக்கு ழுந்தது. இனி உங்களைத் தேடிப் பிரயோஜனமில்லை என்று நான் முடிவு கட்டிக் கொண்டு கிளம்பின சமயத்தில்தான் உங்கள் குரலைக் கேட்டேன். நீங்கள் மட்டும் கூச்சல் போடாமலிருந்தால் நான் திரும்பிப் போயிருப்பேன்’’ என்றாள்.

‘‘நீ அப்படித் திரும்பிப் போயிருந்தால் நானும் நீ அங்கு பார்த்தாயே, எலும்புக் குவியல்... அதைப் போல எலும்பாக இருப்பேன்!’’

‘‘என்ன?’’

‘‘ஆமாம். ‘மனோகர்அன் கோவி’ன் உரிமையாளனான மனோகர்தான் அங்கே எலும்புக் கூடாகக் கிடக்கிறான். நம்மைத் துரத்திய எலிகள்தான் அவனை அம்மாதிரி மாற்றி விட்டன.’’

‘‘நாம் இங்கிருந்து எப்படித் தப்புவது?’’ என்று திகிலோடு கேட்டாள் சுசீலா.

‘‘இந்த அறை பாஸ்கரின் கள்ளக் கடத்தல் பொருள்களைச் சேமித்து வைக்கும் அறையாகும். நாம் வந்த வழயில் இந்தப் பெட்டிகளைக் கொண்டு வருவது மிகவும் சிரமமான காரியம். அதனால் இதற்கு வேறு எங்காவது ஒரு வாசல் இருக்க வேண்டும்’’ என்று கூறியபடி எழுந்தார் பரஞ்சோதி.

அந்த அறைக்கு வெளியே எலிகள் பயங்கர ஓசைகளை எழுப்பியவாறிருந்தன. அந்த அறையின் சுவற்றைத் தடவிப் பார்த்தும் தட்டிப் பார்த்தும் ஏதாவது பொறிக் கதவு இருக்கிறதா என்று பார்த்தார் பரஞ்சோதி. அவர் கையில் எலி கடித்த இடம் அவருக்கும் பயங்கர வலியை ஏற்படுத்தியது.

ஒரு இடத்தில் ஒரு இரும்பு வளையம் காட்சி அளித்தது. அதைப் பிடித்துத் தன் பலங்கொண்ட மட்டும் இழுத்தார் அவர். அந்த இடம் திறந்து கொண்டது.

                                                                                                       -இன்னும் வரும்....!


5 comments:

  1. கதையில் சுவாரஸ்யம் கூடி வருகிறது. தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. நல்ல விறுவிறுப்பு... எப்படியோ ஒரு வலியுடன் ஒரு வழி கிடைத்தது...

    ReplyDelete
  3. அப்பாடா.... ரெண்டு பேரும் தப்பிருவாங்கதானே?

    ReplyDelete
  4. அட பயங்கர சுவாரசியம்....

    எலிக்கூட்டம்... அப்பாடா....

    ReplyDelete
  5. சில இடங்களில் நம்பமுடியாமல் இருந்தாலும் பதியை கொன்ற பாவை செம திரில்.அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்

    ReplyDelete